Ad Code

If you need any help please contact us via WhatsApp!

கடுவெளிச் சித்தர் - பாபஞ்செய் யாதிரு மனமே (பாடல் முழுவதும்)

கடுவெளிச் சித்தர் - பாபஞ்செய் யாதிரு மனமே (பாடல் முழுவதும்)

கடுவெளிச்சித்தர்

கடு என்பதற்கு பெரிய என்று பொருள். கடுவெளி என்பது பரந்த வெளி. பரந்த வெளியாகிய மனதை நோக்கி அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன. ஆகையால் கடுவெளிச்சித்தர் என்று அழைக்கப்படுகின்றார்.

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்

விளக்கம்

மனமே! உயிர்களைத் துன்புறுத்தும் பாவச் செயலைச் செய்யாதே. அப்படிப்பட்ட செயலைச் செய்வாயானால் எமன் உன் மீது கோபம் கொண்டு உயிரைக் கொண்டு சென்று விடுவான்.

பாடல்-1

சாபங்கொடுத்திட லாமோ - விதி
தன்னைநம் மாலே தடுத் திடலாமோ
கோபந் தொடுத்திட லாமோ - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ.

விளக்கம்

ஒருவரை துன்பம் தரும் வார்த்தைகளால் சபிக்கக் கூடாது. சபிப்பதால் அவருக்கு விதிக்கப்பட்ட விதியை உன் சாபத்தால் மாற்ற முடியாது. எனவே கோபம் கொள்ளாதே! ஆசையைத் தூண்டுகின்ற எண்ணத்தைத் தூண்டாதே.

பாடல்-2

சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தாற்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத் திவிசு வாசம் - எந்த
நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்.

விளக்கம்

சூது என்பது சூதாட்டம் பொய் என்பது இல்லாத ஒன்றை உண்டு என்றும் உள்ளதை இல்லை என்றும் கூறுவதாகும். மோசம் என்பது பிறர் பொருளை அபகரிப்பதாகும். இவை மூன்றும் மனித வாழ்வைச் சீர்குலைக்கும். இவற்றைச் செய்பவர்கள் நரகத்தை அடைவார்கள் உறவுகள் அவர்களை விட்டுப் பிரிவார்கள். F எனவே இறைவன்பால் பக்தி கொண்டு, செய்ந்நன்றி மறவாமல், அனைவரிடமும் நட்பு கொண்டு வாழ வேண்டும்.

பாடல்-3

நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறி மாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் சற்றும்
பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்.

விளக்கம்

தண்ணீரின் மேல் நீர்க்குமிழி தோன்றி உடனே அழிந்துவிடும். அதுபோல நம் உடலும் தோன்றியவுடன் அழிவது உறுதி. இந்த உண்மையை உணர்ந்து இந்த உலகின் மேல் பற்று இல்லாமல் இருப்பதே சிறந்தது.

பாடல் -4

நந்த வனத்திலோ ராண்டி - அவன
 நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.

விளக்கம்

ஓர் ஆணும் பெண்ணும் இறைவனை (குயவன்) வணங்கினர். அவர்களின் வேண்டுதலுக்கிணங்கி ஒரு குழந்தையை (தோண்டி) இறைவன் கொடுத்தார். அக்குழந்தையைப் பராமரிக்க மறந்து அதன் தந்தை ஆடிய ஆட்டத்தால் அந்தக் குழந்தை இறந்து விட்டது. எனவே இந்த உடல் அழிகின்ற தன்மை உடையது என்று உணர்ந்து இறைவனை வணங்க வேண்டும்.

பாடல்-5

தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்
சொத்துக்க ளிலொரு தூசும் நில் லாதே
ஏடணை மூன்றும் பொல்லாதே - சிவத்
திச்சைவைத் தாலெம லோகம் பொல் லாதே.

விளக்கம்

யாரையும் இழிவாகப் பேசுதல் கூடாது. பொருளாசை மண்ணாசை, பெண்ணாசை என்ற மூன்றும் பொல்லாதவை. இவற்றை விட்டு விட வேண்டும். சிவனை அன்பு கொண்டு வணங்கினால் எமன் நம்மை நெருங்குவதில்லை.

பாடல்-6

நல்ல வழிதனை நாடு - எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு.

விளக்கம்

நன்மையான வழிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். எந்நேரமும் இறைவனை நினைத்திருக்க வேண்டும். அறிவுள்ள பெரியோருடன் கூடியிருக்க வேண்டும். வள்ளலாகிய இறைவனை வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

பாடல்-7

நல்லவர் தம்மைத்தள் ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே - கெட்ட
பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே.

விளக்கம்

உத்தமர்களான பெரியோர்களின் உறவைக் காத்துக் கொள்ள வேண்டும். தருமங்கள் முப்பத்திரண்டையும் தவறாது செய்ய வேண்டும். தீமையானவற்றைப் பின்பற்றாது இருக்க வேண்டும். பொய் பேசுதல் வேண்டும். கோள் சொல்லுதல் இவற்றை நீக்க

பாடல்-8

வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாதக நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு.

விளக்கம்

வேதங்களில் கூறப்பட்டுள்ள நன்மையான வழிகளைப் பின்பற்ற வேண்டும். பெரியோர்கள் காட்டிய வழிகளில் விருப்பமுடன் செல்ல வேண்டும். மன அமைதி தரும் வார்த்தைகளை மட்டும் பேச வேண்டும். கொடுமையான கோபத்தை அழிக்க வேண்டும்.

பாடல்-9

பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே
இச்சைய துன்னை யாளாதே - சிவன்
இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே.

விளக்கம்

ஒரு பொருளையும் பிறரிடம் இருந்து இரவாமல் வாழ வேண்டும். பெண்களின் மீது ஆசை கொண்டு அழிந்து போகாமல் நம்மைக் காக்க வேண்டும். இறைவனின் மீது பற்று கொண்டு மனம் மாறாமல் பக்தியுடன் செயல்பட வேண்டும்.

பாடல்-10

மெய்ஞ்ஞானப் பாதையில் ஏறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு -உன்னை
அண்டி னோர்க் கானந்த மாம் வழி கூறு

விளக்கம்

மெய்ஞ்ஞானப்பாதையாகிய அட்டாங்க யோகம் பயில வேண்டும். சரியை கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றைப் பயிலுதல் உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை தரும். இவற்றைக் கற்றால் மரணமிலாப் பெருவாழ்வு அடையலாம்.

பாடல் -11

மெய்க்குரு சொற்கட வாதே - நன்மை
மென்மேலுஞ்செய்கை மிகவடக் காதே
பொய்க்கலை யால்நட வாதே -நல்ல
புத்தியைப் பொய்வழி தனில்நடத் தாதே.

விளக்கம்

உண்மையான குருவின் சொற்படி நட. அவரின் சொற்களை மீறாதே. நன்மை செய்வதை நிறுத்தக் கூடாது. தொடர்ந்து நன்மை செய்து கொண்டிரு. பொய் சொல்லாதே. நல்ல புத்தியை பொய்யான வழியில் பயன்படுத்தாதே. புத்திசாலித்தனம் அதிகமாகப் பயன்படாது. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கின்ற புத்திசாலித்தனம் இல்லாவிட்டால்,

பாடல் -12

கூட வருவதொன் றில்லை - புழுக்
கூடெடுத் திங்கள் உலவுவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை - அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை.

விளக்கம்

இறக்கும்போது நாம் செய்த பாவ புண்ணியங்களைத் தவிர வேறொன்றும் கூட வராது. காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே. பட்டுப்புழு தன்னைச் சுற்றி தானே கூடு அமைத்து அடைத்துக் கொள்ளும். மனிதனும் தன் ஆசையினால் உடல் என்ற கூட்டை மறுபடி மறுபடி உற்பத்தி செய்தி அடைபட்டுக் கொள்கிறான். உலகில் பிறப்பதற்கான நோக்கம் மோட்சம்தான் அதாவது விடுதலை. நாம் யார் என்ற உண்மையை உணர்ந்து கொள்வது. ஆசைகள் நம்மை உணரவிடாமல் மயக்கி விடுகின்றன. தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டு வாழ்க்கையை வீணாக்குவதைத் தவிர நாம் வேறென்ன செய்து கொண்டிருக்கிறோம். தெளிந்த அறிவு உடையவர்கள் கூட வாழ்வின் லட்சியத்தை நோக்கிக் பயணிப்பதில்லை.

பாடல் -13

ஐந்து பேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு -அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு.

விளக்கம்

நாம் அனைவரும் ஐம்பூதங்களான(நீர் நிலம் காற்று மண் ஆகாயம்) ஆகிய இயற்கையால் சூழப்பட்டிருக்கிறோம். நாம் எதை நாடுகிறோமோ அதை ஐம்புலன்களால் அடைகிறோம். உண்மையை நாடும் போது ஐம்புலன்கள் அமைதி அடையும். உடம்பு தேர் ஐம்புலன்கள் குதிரைகள் புத்தி கடிவாளம் ஜுவன் தேர்ப்பாகன் ஆன்மா பிரயாணம் செய்பவர். இடைவிடாமல் விழிப்போடு இரு. வாழ்க்கையில் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. அப்படிக் கிடைக்கலனா அதுக்காக நீ கடுமையா உழைக்கலனு அர்த்தம். உண்மையை அடைவதற்காக என்ன விலை வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்க வேண்டும். எது ஒன்றையும் அறிய அதன் மூலத்தை அடைய வேண்டும். தாயை அறிந்தால் பிள்ளையை அறியலாம். தாயைப் போல பிள்ளை. மூலாதாரத்தை அடையும் போது முத்தி பெறலாம்.

பாடல் -14

உள்ளாக நால்வகைக் கோட்டை -பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னும் காட்டை -வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை

விளக்கம்

உடல் மனம் புத்தி தான்மை (அகங்காரம், நான்) ஆகிய நான்கு உறைகளுக்கு அப்பால் ஆன்மா உள்ளது. நான்கு கோட்டைகளின் பகைமைகளை வென்று கடந்து சென்றால் ஆன்மாவை அடைந்தால் உலகம் உன்னுடையது. தோற்றம் வேறு உண்மை வேறு. கள்ளப்புலன்கள் உண்மையை உணர்வதில்லை. ஆன்மா ஒன்று மட்டுமே உள்ளது. ஆனாலும் எப்படி இவ்வளவு வேறுபாடுகள் தோன்றுகிறது? புலன்களின் விஷமங்களைப் பார்த்தாயா? ஒன்றை மற்றொன்றாகக் காட்டுகிறது. இந்தப் புலன்களை நம்பாமல் எது என்ன? எது உண்மை? என ஆராய்ச்சி செய்தால் முத்தி அடையலாம்.

பாடல்-15

காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ
பேசமுன் கன்மங்கள் சாமோ -பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ.

விளக்கம்

காசிக்குப் போனாலும் கங்கையில் நீராடினாலும் பாவங்கள் போகாது. பாகற்காயை கங்கையில் கழுவினாலும் அதன் கசப்புத் தன்மை நீங்காது. செய்த நல்வினையும் செய்கின்ற தீவினையும் ஒரு எதிரொலியை காட்டாமல் மறையாது. ஆகவே ஒருவர் எச்சரிக்கையுடன் வாழ வேண்டும். வாழ்க்கையில் துன்பப்படாமல் கிடைப்பதில்லை.

பாடல்-16

பொய்யாகப் பாராட்டுங் கோலம் எல்லாம்
போகவே வாய்த்திடும் யாவர்க்கும்போங் காலம்
மெய்யாக வேசுத்த சாலம் - பாரில்
மேவப் புரிந்திடில் என்னனு கூலம்.

விளக்கம்

பொய்யாகப் பாராட்டுதல் நாம் யார் என்பதே நமக்குத் தெரியவில்லை. இதில் பிறரை பாராட்டுதல் எடை போடுதல் குறை கூறுதல் எல்லாம் தவறாகவே அமையும். முதலில் நான் யார் என்று கண்டுபிடி தோற்றம் வேறு உண்மை வேறு. மரணம் உன் உண்மை நிலையை உணர்த்திடும். உண்மையைத் தேடி வாழ்ந்திடு. உண்மையாய் வாழ்ந்திடும் போது உலகம் அனுகூலமாக அமையும்.

பாடல்-17

சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
சார்ந்துகொண் டாலுமே தாழ்வில்லா பொங்கம்
அந்தமில் லாதவோர் துங்கம் எங்கும்
ஆனந்த மாக நிரம்பிய புங்கம்.

விளக்கம்

நிலையாக இருப்பது இறைவன், உண்மை. மற்றவையெல்லாம் நிலையில்லாதவை. அவைகளைச் சார்ந்தால் அழிவு நிச்சயம். உண்மையைச் சார்ந்தால் மரணமில்லா பெருநிலையை அடையலாம்.

பாடல்-18

பாரி லுயர்ந்தது பத்தி - அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.

விளக்கம்

உண்மையை அடைய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று பக்தி மற்றொன்று ஆராய்ச்சி (தியானம்). ஆனால், இரண்டுமே முடிவில் ஒரே உண்மையைத்தான் அடைகின்றன.

பாடல்-19

அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
மானந்தத் தேவின் அடியினை மேவி
இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி.

விளக்கம்

எல்லா உயிர்களிடத்தும் அன்போடு இருக்க வேண்டும். மண்ணுயிரையும் தன்னுயிர் போல் நினை. இறைவனை நினைத்து மகிழ்வோடு இடையறாது அவன் திருவடியை நினைத்து தியானித்து பிறப்பு இறப்பு என்ற சூழலில் இருந்து ஈடேற்றம் காண வேண்டும்.

பாடல்-20

ஆற்றறும் வீடேற்றங் கண்டு - அதற்
கான வழியையறிந்து நீ கொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடுங் கொண்டு.

விளக்கம்

வீடு பேற்றை அடைவதற்கு முழு தியாகமே வழி அதனால் தான் நம் முன்னோர்கள் எல்லாருமே இந்த உலகம் கனவு போன்றது இதிலிருந்து விழித்துக் கொண்டு உண்மை நிலையை உணர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர். இந்தக் கனவை தியாகம் செய்துவிட்டு உண்மையை நோக்கி இறைவனை நோக்கிச் செல்லுங்கள்

பாடல்-21

ஆன்மாவா லாடிடு மாட்டந் - தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் நாளும்
வையி லுனக்கு வருமே கொண் டாட்டம்.

விளக்கம்

இந்த உலகத்தில் ஆன்மா ஒன்றே உள்ளது. மற்றவைகள் ஆன்மா மீது வரையப்பட்ட சித்திரங்கள். இருப்பதாகத் தோன்றுகிறது தோற்றம் வேறு உண்மை வேறு. ஆன்மா நீங்கினால் உடல் வாடிவிடுகிறது. ஆதலால் அந்த ஆன்மாவை உண்மையை உணர்ந்து கொள்வதே குறிக்கோள். இதை நினைவில் கொண்டு இடையறாது தியானித்தால் பேரின்ப நிலையை அடையலாம்

பாடல்-22

எட்டு மிரண்டையும் ஓர்ந்து-மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து
ஆனந்த வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து.

விளக்கம்

தமிழில் 'அ' என்றும் சிவம் என்றும் குறிக்கப்படும் எட்டும், 'உ' என்றும் சக்தி என்றும் குறிக்கப்படும். இரண்டும் பற்றி சிவசக்தி ரூபமாய் ஆராய்ந்து சாத்திரங்கள் அனைத்தையும் தன்னுள்ளே ஆராய்ந்து முடிவான ஒன்றைத் தேர்ந்தெடுத்து கடுவெளி என்னும் வெப்ப வெளி என்றும் அழை பிரமம் சார்ந்து ஆனந்த மகிழ்வெய்திக் கொள்க

பாடல்-23

இந்த வுலகமு முள்ளுஞ் - சற்றும்
இச்சைவை யாமலே எந்நாளுந் தள்ளு
செந்தேன்வெள் ளமதை மொள்ளு - உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு.

விளக்கம்

இந்த உலகம் ஒரு சிறைக்கூடம். உடல் ஒரு சிறை. இதில் நாம் அடிமையாக அடைக்கப் பட்டிருக்கிறோம். ஆனால், நாம் சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நினைப்பு தாள் வாழ்க்கையைக் கெடுக்கிறது. நம் ஆசைகளால் தான் இந்த உலகத்தைப் படைத்து உடலைப் படைத்து நம்மை நாமே அடிமையாக்கிக் கொண்டோம். ஆதலால் விழித்திரு. கனவுகள் போல் ஆசைகள் காணாமல் போய்விடும். விட்டு விடுதலையாகி விடுவாய்.

பாடல்-24

பொய் வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
போதகர் சொற்புத்தி போதவோ ராதே
மைவிழி யாரைச்சா ராதே- துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே.

விளக்கம்

பொய் வேதம் என்பது வாழ்வின் குறிக்கோள் இன்பம் என போதிப்பது. அவர்கள் சொற்புத்தியோ சுயபுத்தியோ இல்லாதவர்கள். அவர்கள் பேச்சைக் கேளாதே. இன்பம் அல்ல முழு தியாகமே வாழ்வின் குறிக்கோள் காமத்திலும் பணத்தாசையிலும் உன்னை அழைத்துச் செல்கின்றவளைச் சாராதே. இறைவனிடத்தில் உன்னை அழைத்துச் செல்லும் பெண்களிடத்தில் நட்பு கொள்ள வேண்டும். சாப்பிடு குடி சந்தோஷமாயிரு. இதுவே மக்களின் உறவினர்களின் நண்பர்களின் குறிக்கோள். மரணமோ வெகு அருகில். பிறகென்ன சீக்கிரம் சீக்கிரம் இறை பக்தியிலும் பிறருக்கு உதவி செய்வதிலும் வாழ்க்கையை பயனுள்ளதாக வாழ்ந்திரு

பாடல்-25

வைதோரைக் கூடவை யாதே - இந்த
வைய முழுதும் பொய்த் தாலும்பொய் யாதே
வெய்ய வினைகள்செய் யாதே - கல்லை
வீணில் பறவைகள் மீதிலெய் யாதே.

விளக்கம்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வாரைத் பொறுத்தல் தலை. உலகம் முழுவதும் பொய்யாக வாழ்ந்தாலும் நீ நேர்மையாக உன் கடமைகளைச் செய்து கொண்டிரு. தீயதை செய்யாதே. வீணாக பறவைகள் மீது கல்லெறியாதே. எல்லா உயிர்களும் வாழ வேண்டும். எந்த உயிரையும் கொல்லக் கூடாது. மண்ணுயிரையும் தன்னுயிர் போல் நினை. அகிம்சையே இறைவனை அடைவதற்கான முதற்படி

பாடல்-26

சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே.

விளக்கம்

இறைவனே உண்மை. மற்ற அனைத்தும் நிலையற்றவை கனவு போல் கலைபவை ஆதலால் இறைவனையே நாடு சண்டை சச்சரவுகளைத் தூண்டாதே. தேவையானவைகளில் மட்டும் கவனம் செலுத்து. தவநிலை அதாவது பொறுப்புடன் வாழ்வதைக் கடைபிடி. தேவையற்ற நூல்கள் சினிமாக்களில் நேரத்தை வீணாக்காதே. உடல் இன்பத்திற்காக என்னவெல்லாமோ செய்து விட்டாய் மரணம் வரப்போகிறதே அதற்காக என்ன செய்திருக்கிறாய்.

பாடல்-27

பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே.

விளக்கம்

பாம்பு முதற்கொண்டு எந்த உயிர்களையும் துன்புறுத்தக் கூடாது. நல்ல குணமுள்ள பெண்கள் பிறப்பது அபூர்வம். அப்படிப்பட்ட பெண்களைப் பழிப்பது உன்னை அழித்துக் கொள்வதற்குச் சமம் தீயதை உலகிற்கு கற்றுக் கொடுக்காதே. உன் ஆணவத்தை நிலைநாட்ட முயற்சி செய்யாதே. நான் என்பதை நாய்க்கு போட்டு விட்டு இருப்பதெல்லாம் இறைவனே செய்வதெல்லாம் இறைவனே. நாமெல்லாம் அவன் கைகளில் வெறும் கருவிகளே என்ற உண்மையை உணர்ந்து அவன் திருவடிகளில் சரணடைவோமாக

பாடல் -28

போற்றுஞ் சடங்கைநண் ணாதே - உன்னைப்
புகழ்ந்து பல ரிற் புகலவொண் ணாதே
சாற்றுமுன் வாழ்வையெண் ணாதே-பிறர்
தாழும் படிக்குநீ தாழ்வைப்பண் ணாதே.

விளக்கம்

அறிவுபூர்வமாக பக்தி இருக்க வேண்டும். இல்லையேல் சடங்குகள் கேலிக் கூத்தாகி விடும். உன் புகழை பலரிடம் சாற்றாதே இறைவனை உணர்வதற்கே வாழ்க்கை. அதற்கான முயற்சி இல்லையேல் வாழ்க்கை வீண். ஆதலால் இறைவனைத் தவிர மற்றவை தாழ்ந்தவை. அந்தத் தாழ்வை உண்டு பண்ணாதே.

பாடல்-29

கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கியே கட்குடியாதே
அஞ்ச வுயிர்மடியாதே - புத்தி
அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே.

விளக்கம்

எல்லா மதங்களும் போதை வஸ்துக்களுக்கு எதிராகவே உள்ளன. ஏனெனில் அது தன்னை தன்னிடமிருந்தே பிரித்து விடுகிறது. மதத்தின் முக்கிய லட்சியம் தன்னை உணர்வது. போதையினால் தன்னுணர்வு போய்விடுகிறது. நாளாக நாளாக மந்த புத்தி உடையவர்களாக உணர்வற்றவர்களாக ஆகிவிடுவார்கள். ஆதலால் கஞ்சா, கள் குடிக்காதே. உயிர்களை அழித்து ஊன் உண்ணாதே. தேவையற்ற பயனில்லாத நூல்களைப் படித்து காலத்தை வீணாக்காதே. மரணமோ வெகு அருகில் பிறகென்ன சீக்கிரம் சீக்கிரம் விழித்திரு...

பாடல்-30

பத்தி யெனுமேனி நாட்டித் - தொந்த
பந்தமற் றவிடம் பார்த்ததை நீட்டி
சத்திய மென்றதை யீட்டி -நாளுந்
தன்வச மாக்கிக் கொள் சமயங்க ளோட்டி.

விளக்கம்

ஒவ்வொரு கணத்தையும் முழு தியானத்திலும் முழு இறைசிந்தையிலும் நாட்டி சத்தியத்தை தன் வசமாக ஈட்டிக் கொள். ஒவ்வொரு கணத்தையும் இதற்கான சந்தர்ப்பங்களாகப் பயன்படுத்திக் கொள். நல்லவற்றின் மீது ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீர்கள். நாளையே கூட அது நிகழலாம். பொறுமையாகக் காத்திரு

பாடல்-31

செப்பரும் பல வித மோகம் எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம்.

விளக்கம்

பென்னாசை, பொன்னாசை, மண்ணாசை இவை மூன்றும் அறியாமையால் உண்டாவது. ஆசை என்பதே அறியாமை தான். ஒவ்வொருவரும் பற்றில்லாதவராகவே பிறக்கிறோம். பிறகு எப்படி பற்று பகையால் சீரழிகிறோம். காரணமும் பற்றற்றுப் பிறந்ததாலே தான். தண்ணீர் சூடாகவும் இல்லை குளிர்ச்சியாகவும் இல்லை. அதன் இயல்பு இரண்டையும் கடந்து. அதனால் நம்மால் அதை சூடாக்கவோ குளிர்ச்சியாக்கவோ முடிகிறது

பாடல்-32

எவ்வகை யாகநன் னீதி - அவை
எல்லா மறிந்தே யெடுத்துநீபோதி
ஒவ்வாவென்ற பல சாதி -யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி

விளக்கம்

இறைவனை முதலில் நீ அனுபவ பூர்வமாக உணர்ந்து அறிந்துகொள். பின் அவரது ஆணை கிடைத்தால் எல்லா வகையான நீதியையும் மக்களுக்குப் போதி. இல்லையென்றால் உன் பேச்சை யார் கேட்பார்கள். கேலிக் கூத்தாகி விடும்.குளத்தை சென்றடைய பல பக்கங்களில் உள்ள படிகளில் செல்வது போல எல்லா மதங்களும் இறுதியில் இறைவனையே அடைகின்றன. ஆதலால் சண்டை சச்சரவுகள் தேவையில்லை.

பாடல்-33

கள்ளவே டம்புனை யாதே -பல
கங்கையி லேயுன் கடம்நனை யாதே
கொள்ளைகொள் ளநினை யாதே -நட்புக்
கொண்டு பிரிந்துநீ கோள்முனை யாகே.

விளக்கம்

உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பது நல்லது. நாமாக அந்தந்த விஷயங்களை வாழ்ந்து பார்த்து உண்மை நிலையை உணர்ந்து கொண்டால் மட்டுமே அதை மற்றவர்களுக்குப் போதிக்க வேண்டும். ஆனால் அனுபவித்து உணராத ஒன்றை வேறு யாருக்கும் போதிப்பதில்லை என்ற ஒன்றை மட்டும் ஒவ்வொருவரும் கடைபிடித்தால் இந்த உலகமே தெய்வீகமாகி விடும். தெரியாததை தெரியும் என்பது போல் வேஷம் போடாதே. உன்னையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றி சீரழியாதே உண்மையாக இரு.

பாடல்-34

எங்குஞ் சயப்பிர காசன் -அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன்.

விளக்கம்

கடுவெளிச் சித்தர் பாடல், சித்தர் பாடல்கள், அங்கிங் கெனாதபடி நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் அன்பு நிறைந்து நிற்கும் இதயத்தில் வாசம் செய்கிறான். அடியவர்களுக்கு தாசன். இறைவனை நினைப்பவர்கள் இன்ப பேற்றை அடைவார்கள்.

Post a Comment

0 Comments